ஞாயிறு, 13 மார்ச், 2011

தங்கவயல் ஆலமரம்!


இதுதான் ஆலமரம்...!!!

ஓ....ஆலமரம் எங்களுக்குத் தெரியாதா...?
நாங்கள் பார்த்ததில்லையா...? என்று கேட்கிறீர்களா..?

பார்த்திருப்பீர்கள். ஆனாலும் இது சற்றே மாறுபட்ட ஆலமரம்.
கோலார் தங்கவயலில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ள இந்த ஆலமரம் தங்கவயலுக்கு ஒரு Land Mark. கோலார் தங்கவயலின் வரவேற்பு வளைவு.

பாலாறு எனப்படும் கண்ணுக்குத் தெரியாத ஆறு இந்த மரத்தின் கீழே தான் மண்ணுக்கடியில் உருவாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இதன் பக்கத்திலுள்ள Ninth Reefs என்று அழைக்கப் பட்ட சிற்றோடையில், மண்ணை சிறிதளவு அகழ்ந்தாலே சுவையான நீர் ஊறும். இம்மரத்தின் பக்கத்தில் உள்ள சிறு குளத்தில் நீர் வற்றுவதே கிடையாது. எப்போதும் நீர் நிறைந்தே காணப்படும்.

தங்கவயலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் எல்லாம், பதினொரு
கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்காருபேட்டை என்னும் ஊரிலிருந்து மாட்டு வண்டியில்தான் வரவேண்டும். பொருட்களை ஏற்றிகொண்டு வரும் வழியில் வண்டியோட்டிகள் உறங்கி விடுவர். காளைகள் சரியாக இந்த ஆலமரத்தடியில் வந்து நின்று விடும்.

வண்டியோட்டிகள் அங்கே இறங்கி, தாம் கொண்டு வந்திருக்கும் கேப்பைக் களிமூட்டையை இந்தக் குளத்தில் நனைத்து கொள்வர். ஒரே மிளகாய் வற்றலையும் சிறிது உப்பையும் அங்குள்ள சுமைதாங்கிக் கல்லின் மீது வைத்துப் பொடித்துக் கொண்டு, அதில் கேப்பைக் களியை தொட்டு உண்டு விடுவர்.

இந்த சாலையில் போவோர் வருவோர்க் கெல்லாம் குடிநீர் தந்தது இந்த ஆலமரத்துக் குளமே. அக்காலத்தில் இவ்வழியாக வந்த அரசப் படைகள் இந்த ஆலமரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டதாகக் கூறுவர். மழைக் காலத்தில் இங்கே தங்குவதற்காக கருங்கற்களால் ஆன சிறிய மண்டபம் இருந்தது. நாளடைவில் அதற்கு மஞ்சள் பூசி குங்குமமிட்டு கோவிலாக மாற்றிவிட்டனர் பக்த"கேடி"கள்

நீங்கள் பார்ப்பது இன்றைய நிலை. குளத்தில் தேங்கிக் கிடப்பது முழுக்க சாக்கடை நீர். நிலத்தடியில் ஊறிய பாலாற்றைக் காணவில்லை. அரையடி மண்ணைக் கிளறினால் ஊறிய நீர் இன்று அய்ந்நூறு அடி ஆழத்துக்குப் போய்விட்டது. நாற்ப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் இங்கு வந்து விளையாடியபோது, காடை, கள்ளிக்காக்கை என்று சொல்லப்பட்ட ஒரு பறவை,
வித விதமான குருவிகள், கழுகுகள், அவைகளின் பின்னணி இசையுடனே விளையாடினோம்.

இன்று இந்த ஆலமரத்தின் நிலை? சுற்றுப்புறம் கட்டிடங்களால் வளர்ச்சி பெற்றுவிட்டது. ஆனால் சுற்றுப்புறச் சூழலும் அமைதியும் காணாமல் போய்விட்டது.

கடந்த கால நினைவுகள் கண்களில் நீராய் வழிந்தோடியது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக